❤
கைகளற்றவன் தோள்பட்டையால்
கண்ணீரைத் துடைப்பது போல,
அவ்வளவு இயல்பாய்
அனிச்சையாய் வந்துவிடுகிறது,
உன்னைப் பற்றிய கவிதைகள்.!
❤
எப்படியடா நினைவுகளின்
சுமை தாங்கி நிமிர்ந்து நடக்கிறாய்.?
நான் அங்கங்கு மோதி
தடுக்கித் தடுக்கி விழுகிறேன்..!
❤
அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசுறேன் என
அழைப்பை துண்டிக்கும் போதெல்லாம்,
ஒவ்வொரு நிமிடத்திற்கும்
ஒவ்வொரு மணிநேரம் காத்திருக்கிறேன்.!
❤
அழுதபடி முத்தம் கொடுத்த அந்த இரவில்
மழை பொழிந்தது.!
இருள்கவிழ்ந்த இரவில் நம் குழந்தைக்கு,
நிலா என்றுப் பெயர் வைத்தோம்.!
❤
நீண்ட பயணங்களில்
தூங்கும் உன்னைத்
தோளில் தாங்கி
விழித்திருக்கவேண்டும்.!
❤
மெதுவாகப் பேசு
விழித்துக் கொண்டிருக்கிறது இரவு.!
❤
உதட்டிற்கும் தேனீர்க் குவளைக்கும்
உள்ள நெருக்கத்தில்
காதல் சுரக்கிறது.
பருகக் கூடுகிறது தேனீர்-பிரியம்.!
❤
உனது தேர்வுகளில் உருப்படியானது
நான் மட்டுந்தான்எனும் போது,
இருவர் கண்ணிலும் பெருமிதம்.!
No comments:
Post a Comment