Friday, June 10, 2016

🔘 தந்தையுமானவன் 🔘


🔘🔘

நேரா பார்த்து நட

என கண்டிக்கும் அம்மாவுக்குத் தெரியாது.

என் நேர் பின்னால் திரும்பி

திரும்பித் திரும்பிப்

பார்த்து நடக்கும் உன்னை..!


🔘🔘

சொல்லு என சொன்னாலும்,

சொல்லுடா என அதட்டினாலும்,

சொல்லூ…டா..  எனக் கெஞ்சினாலும்

சொல்வதில்லை.

சரி சொல்ல வேணாம் போ.

என சொல்லும் போது

கேளு

கேளேன்

கேளும்மா என சொல்கிறாய்

இது என் முறை ..

சரி இப்ப சொல்லு..!! 😜

🔘🔘

ஒன்று சேர்ந்து படிக்க

ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்

கதவைப் பூட்டி

கடிதம் பிரி.


🔘🔘

கன்னத்தில் ஊரும் எறும்பைப் பார்த்து

அதுவும் உன்னைக் காதலிக்கிறதென்கிறாய்.

சே,

இதெல்லாம்

கவிஞனின் கண்ணில் மட்டும்தான்

பட்டுத் தொலைகிறது.!

🔘🔘

மார்பை மிதித்து நிற்கிறேன்.

நிழல் தருகிறாய்.!

🔘🔘

அப்படித்தான் இருக்கிறது

ஒரு கோவில் திருவிழாவில்
தோளில் தூக்கித் தேரை காண்பிக்க,

பண்டிகை நாளின் இரவுவரை
இனிப்பிற்கு காத்திருக்க,

பிறந்தநாளுக்குப் புதுத்துணி வாங்கிவர,

பாதுகாப்பாய் அழைத்துவர,

தூங்க ஒரு கதை சொல்ல,

அப்பாவுக்குப் பின்னும்
நீ வந்த பின்னும்

அப்படித்தான் இருக்கிறது.!

No comments:

Post a Comment