⚫
கடவுளே
அவன் காய்ச்சலை எனக்கும்
என் காதலை அவனுக்கும்
இப் பக்தைக்கு பரிமாற்று.
⚫
ஹலோ சொல்லும்போதே
கண்டுபிடித்துவிடுவேன்,
நீ
காதலில் இருக்கிறாயா.?.
இல்லை
காய்ச்சலில் இருக்கிறாயா.? - என்று
உன் அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியுமா.?.
நானறிய மாட்டேனா என்ன..??.
⚫
உன் நெற்றி முத்தத்திற்காக
நித்தம் வரட்டும்
கடுஞ்ஜுரம் எனக்கு..!..
⚫
உன் சின்ன காய்ச்சல்தான்
என் பெரிய கவலை
தனக்கு வந்தால் தான் தெரியும்
காதலும் காய்ச்சலும்.?!.
⚫
சோம்பலாய் படுத்திருக்கிறாய் .
சோகையாய் புன்னகைக்கிறாய்.
கண்ணுக்குள் காதல் கலைந்து,
ரொமாண்டிஸம் உதட்டில் ஒளிந்து.
⚫
காதல்
வாழ்தலை பற்றிய
அச்சத்தையும்,
காய்ச்சல்
வாழ்க்கையை பற்றிய
அச்சத்தையும்
கற்பிக்கிறது.
⚫
உள்ளங்கை அழுந்த உரசி சூடேற்றலாம்,
வேளை பார்த்து விழுங்கத்தரலாம்
மாத்திரையும் மருந்தையும்.
நெற்றியில் முத்தமிட்டு,
திருநீற்று பொட்டு வைக்கலாம்.
இல்லை,
சேர்த்தணைத்து முத்தமிட்டு
சேர்த்து கொள்ளலாம் உன்னுடைய காய்ச்சலை..
நா வேறென்ன செய்யட்டூ(ம்)..?.
⚫
கைக்குழந்தையைபோல்
ஈனஸ்வரத்தில் முனங்குகிறாய்.
கன்னித்தாய் என உணருகிறேன்.
ஆலயத்தில் அகல்விளக்கையும்
தேவாலயத்தில் மெழுகுவர்த்தியும்
ஏற்றி வழிபடுகிறேன்.
ஒரே சுடர்
ஒரே பிராத்தனை
இரண்டிலும் ..
சாமியில் என்ன பெரியசாமி சின்னசாமி .?.
⚫
"நா உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்" ன்னு
நா சொல்றத விட,
"நா உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்" ன்னு
நீ சொல்றது தான் நல்லாருக்கு..
⚫
சாதாரண காய்ச்சல்
சளி காய்ச்சல்
வைரல் ஃபீவர்
இன்ஃபெக்ஷன்
ஆர்.பி.சி. டபிள்யு.பி.சி.
பயோ ஹெமிஸ்ட்ரி
இதெல்லாம் எனக்கு தெரியாது,
புரியவும் செய்யாது.
எனக்கு தெரிந்ததெல்லாம்
உனக்கு காய்ச்சல்.
உனக்கு காய்ச்சல்.
உனக்கு காய்ச்சல்.
⚫
சோபிக்க முடியாத சோம்பலில்
படுத்திருக்கிறாய்..
நித்தம் ஏங்காத நாட்களே இல்லை..
நீ தூங்கும் தலையணையாய்
பிறந்திருக்கக்கூடாதா என்று.!.
⚫
ஏன்டீ
"உம்"முன்னு இருக்க
என்னும் அம்மாவிடம்
"...ம்....
ம்ஹீம்..."
என பதில் மடுத்தேன்.,
உதடுகள் பிரியாது
வேறெதை சொல்வது
"ம்" மை தவிர்த்து.?.
⚫
நடுக்கும் குளிரில்,
கம்பளியாய் அணைத்துக்கொண்டிருக்கிறேன்..
உருகி, ஊடுருவி வரலாம்
உன் முதுகுப்புறம்..!.
⚫
தகிக்கும் வெப்பத்தை
குழைத்தெடுத்து,
நெற்றியில் ஒரு கண்ணாய் மாற்றிக்கொள்
எம்பெருமானே...
⚫
உரோமம் அடர்ந்த உனது மார்பில்
யூகலிப்டஸ் தைலம் தேய்த்துவிடுகிறேன்..
நனைகிறது ஊசியிலை காடு..!.
⚫
நீ ஒன்னுமில்ல எனும் போது,
ஏதோ ஒன்று இருக்கிறது.
பரவால்ல எனும் போது,
பக்கத்தில் இருக்க சொல்கிறது.
ஒரே ஒரு கோரிக்கை தான் உன்னிடம்
பொய்கூட சொல்லிக்கோ,
உண்மையை மறைக்காதே.. ப்ளீஸ்...
⚫
நான், நான் தீர்ந்து
நீயாக இருக்கிறேன்..
என்னுள் இருக்கும் உன் நானுக்கு
உடல் சுகமில்லை.,
உன்னுள் இருக்கும் என் நானுக்கு
மனம் சுகமில்லை..
⚫⚫⚫